கால்நடை வளர்ப்பு
முன்னுரை
மடியே பால் மாட்டின் மிக முக்கியமான பாகமாகும் மடி இல்லையேல் பால் இல்லை, பால் இல்லையேல் பால் மாட்டின் வாயிலாகவரும் பொருளாதார வருமானத்திற்கு வழியில்லை, எனவே மடியை பாதுகாத்தல் மிக முக்கியமானது ஆகும்.
பால் மடி ஒரு கண்ணோட்டம்
பால் மடியானது நான்கு சமபாகங்களாக காணப்படும் ஒவ்வொரு பாகத்திலும் ஒருகாம்பு என்ற விகிதத்தில் நான்கு காம்புகளை உள்ளடக்கியது. பால் மடியில் அதிக படியான இரத்தம் வேகமாக சுழலுவதால் பால் உற்பத்தி உண்டாகிறது. சுமார் ஒரு லிட்டர் பால் உற்பத்தியாவதற்கு 70 லிட்டர் இரத்தம் சுழல வேண்டும். மேலும் பால் காம்புகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை.
மடியில் ஏற்படும் பிரச்சனைகள்
• சாதாரணமாக கன்றுகள் பல்பட்டு மடியில் புண் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
• அத்துடன் கறவையாளர் நகங்கள் கீறுவதால் புண் ஏற்படும்.
• மென்மையான காம்புகள் பனி போன்ற இயற்கையினாலும் புண் ஏற்படும்.
• மடிநோய், காம்பு துவாரம் அடைப்பு, அலர்ஜி காம்பு வீக்கம், காணைப் கொப்புளங்கள், மடி அம்மை, மடியில் ஏற்படும் கழலைகள், வேலி மற்றும் முள்கம்பிகளை தாண்டும் போது ஏற்படும் காயம் ஆகியவற்றால் மடியில் புண் ஏற்படுகிறது.
மடிப் புண்ணால் ஏற்படும் பாதிப்புக்கள்
மடியில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளால் பால் உற்பத்தியில் பெரிய பாதிப்பு ஏற்படும். பால் உற்பத்தி குறைவு ஏற்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே மடியில் புண் மற்றும் காயம் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரைக் கொண்டு முறையான சிகிச்சை அளிக்கத் தவறினால் மடி சோடையாக வாய்ப்புகள் உள்ளது.
தொகுப்புரை
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மடியை நம் கண்களை பாதுகாப்பது போல் மிகக் கவனத்துடன் பாதுகாத்து மடியில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து பால் உற்பத்தியை பெருக்க ஆவண செய்தல் வேண்டும்