பயறுவகை பயிர்கள்
முன்னுரை
கொண்டைக்கடலையில் (சுண்டல்) இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெள்ளை கொண்டைக்கடலை, மற்றொன்று கறுப்புக் கொண்டைக்கடலை. இது அளவில் சற்றுச் சிறியது, உறுதியானது. இது, நாடு முழுவதும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. கறுப்புக் கொண்டைக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாடும் இந்தியா.கறுப்புக் கொண்டைக்கடலை உள்நாட்டு வகையாகத் தற்போது கருதப்பட்டாலும், இது தென்கிழக்கு துருக்கியில் இருந்து வந்ததுதான். இப்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் பெருமளவு விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் புரதம் நிரம்பியது.
ரகம்
கோ 3, கோ 4.
பட்டம்
ஐப்பசி, கார்த்திகை
விதையளவு
20 -25 கிலோ / ஏக்கர்.
விதைநேர்த்தி
விதைப்பதற்கு முன்பு 25 கிலோ விதையுடன் 200 கிராம் சூடோமோனஸ், 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
உயிர்உர விதை நேர்த்தி
ரைசோபியம் 200 கிராம், பாஸ்போபாக்டீரியா 200 கிராம் இரண்டையும் ஆறிய அரிசி வடிஞ்சியுடன் கலந்து நன்றாக நிழலில் விதையை உலர வைத்து விதைக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
சட்டிக் கலப்பையால் ஒரு உழவும், டிராக்டர் உழவு இரண்டு முறையும் உழ வேண்டும் டிராக்டர் உழவு உழுவதால் அருகு, கோரை போன்றவை கட்டுப்படுத்தலாம் மற்றும் தண்ணீர் சேமிக்க ஏதுவாக இருக்கும்.
அடியுரம்
ஏக்கருக்கு 60 கிலோ டி.ஏ.பி. உழவுசாலில் போடவேண்டும்.
சூப்பர் பாஸ்பேட்டாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும்.
தொழுவுரம்
தொழுவுரம் 2 டன், ஊட்டமேற்றிய தொழுவுரமாக இருந்தால் ஒரு டன் போடவேண்டும்
உயிர் உரம்
ரைசோபியம் 2 கிலோ பாஸ்போபாக்டீரியா 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி 2 கிலோ ஆறிய தொழுஎரு 30 கிலோவுடன் கலந்து மண் ஈரமாக இருக்கும்பொழுது தூவவேண்டும்.
நுண்ணுரம்
விதைத்த 4ம் நாள் பயறுவகை நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 2 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தின் மேல் தூவவேண்டும்.
விதைப்பு முறை
உழவுசாலின் போது போடவேண்டும்
பயிர் இடைவெளி
30 X 10 செ.மீ (33 செடிகள் / சதுர மீட்டர்) .
நீர் நிர்வாகம்
தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
களை நிர்வாகம்
விதைத்த 25 ம் நாள் ஆட்கள் மூலம் களையை கட்டுப்படுத்த வேண்டும்
வளர்ச்சி ஊக்கிகள்
40 முதல் 50 ம் நாளில் பூ பூக்கும் சமயத்தில் ஒர லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம். மல்டிகே மாலை வேளையில் தெளிக்க வேண்டும். இவற்றை பூக்கும் பருவத்திலும் பிஞ்சு பிடிக்கும் பருவத்திலும் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்.
பச்சைக் காய்ப்புழு
இதன் பழுப்பு நிற தாய்ப்பூச்சி சிறிய மஞ்சள் நிற முட்டைகளை இளம்தளிர்கள், பூக்கள், காய்களில் தனித்தனியாக இடுகின்றன. இவற்றில் இருந்து வெளிவரும் புழுக்கள் தலைபாகத்தை மட்டும் காய்களுக்குள் செலுத்தி வட்டவடிவ துவாரங்கள பிஞ்சு, காய்களில் ஏற்படுத்துகின்றன.
கட்டுப்படுத்தும் முறை
விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம். டிரைக்கேகிரம்மா ஒட்டுண்ணி அட்டை 4 சிசி / ஏக்கர்
வேரழுகல் நோய்
வேர்அழுகல் நோய் தாக்கப்பட்ட செடியின் இலைகள் சிவப்பாகி பிறகு காய்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை
ஒருலிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் கார்பன்டிசம் கலந்து பாதிக்கப்பட்ட செடியின் வேரினை சுற்றி ஊற்றவேண்டும்.
நோய் அடிக்கடி தாக்கும் பகுதியில் டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தியும் மண்ணில் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் தொழுவுரத்துடன் கலந்து இட்டு கட்டுப்படுத்தலாம்
சாம்பல் நோய்
இலைகளின் இரு புறங்களிலும் சிறிய வெண்மைகலந்த சாம்பல் நிறமான புள்ளிகள் காணப்படும். இலைகள் உதிர்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை
கார்பன்டிசம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
அறுவடைத் தொழில் நுட்பம்
நன்கு பழுத்த. காய் முதிர்ந்த செடிகளை காலை வேளையில் அறுவடை செய்து இயந்திரம் கொண்டு பிரித்தெடுக்கலாம்
முடிவுரை
பயறுவகை பயிர்களான கொண்டைக்கடலை (சுண்டல்) ஒரு உணவுப் பொருளாக அதிகளவிற்கு பயன்படுத்தப்பட்டு வருவதால் இவற்றின் தேவை அதிகரிக்கிறது ஆனால் உற்பத்தி குறைவாகவே உள்ளது. எனவே இவற்றின் விளைச்சலை அதிகரிக்க வேண்டிய நிலை இருப்பதால் நாம் அவற்றை சாகுபடி செய்து நல்ல வருவாயை பெற முன் வருவோம்.